Monday, February 15, 2010

இந்திரனும் சிறுகுரங்கும்

இந்திரனும் சிறுகுரங்கும்!

நாம் வாழ்க்கையில் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கிறோம். சிலர்
செல்வந்தர்களாகவும், பலர் ஏழ்மையில் உழல்பவராகவும் இருக்க
காணுகிறோம். இந்நிலைமை ஏன்?

சிலர் பரம்பரைப் பணக்காரர்களாகவும், சிலர் தன் உழைப்பால் பெரிய நிலைக்கு
உயர்ந்தவர்களாகவும், சிலர் பரம்பரைப் பணக்காரர்களாகயிருந்து பின் தாழ்வுற்று
வறியவர்களாகவும், சிலர் ஏழ்மையில் பிறந்தாலும், தன் சுயமுயற்சியால் பெரும் பணக்காரர்களாக ஆகுவதையும் நாம் பார்க்கிறோம். ஏன் இந்த நிலை?

சிலர் பெரும் பணக்காரர்களாக இருந்தும் மனத்தளவில் பிச்சைக்காரர்களாக
இருப்பதையும், மேலும் சிலர் பிச்சையெடுத்து உண்ணும் நிலைமையிலும்,
பிறருக்கு ஈந்து மனதளவில் பணக்காரர்களாக திகழ்வதும் கண்கூடு. இதற்கு
காரணம் என்ன?

இதற்கெல்லாம் அறிவியல் ரீதியாக விளக்கம் காண முடியாது. ஆன்ம வழியில்
இதற்கு விளக்கம் தேடமுடியும். அப்படி விளக்கம் காண தேடியதின் விளைவாக
எழுந்ததுதான், சமயங்களின் பரிணமிப்புகளும், பலதரப்பட்ட சமயக் கோட்பாடுகளும்.

இதெற்கெல்லாம், கடவுள் காரணம் என்று சுலபமாக சொல்ல முடியாது.
இதேல்லாம், கடவுளின் செயல் என்று சமணமும் ஒப்புக் கொள்வதில்லை.
கடவுளின் செயல் என்றால் அதற்கு முழுச் சமாதானம் கூற முடியாது. இது நிற்க!

மேலே கூறியவற்றிக்கு சமாதானம் கூறும் பொருட்டு சமணம் ஊழ்வினை வாதத்தை முன் நிறுத்தியது. ஒருவன் ஒரு பிறவியில் செய்த பாவ, புண்ணியப் பயன்களை வரும் பிறவிகளில் அவன் அனுபவித்தே ஆகவேண்டும். பணக்காரரின் மகனாக பிறப்பவன், தந்தையின் மறைவிற்குப் பிறகு நொடிந்து, வறுமைப் பற்ற பிச்சைக்காரன் ஆகிறான். மற்றொருவனோ, ஏழ்மையில் பிறந்தாலும், பின் செல்வச் செழிப்பிலே திளைக்கிறான். இதற்கு காரணமாக அமைவது ஊழேயாம்.

இவற்றை வெகு அழகாக விளக்குகிறார் திருத்தக்க தேவர் பெருமான்.

பெரிய இன்பத்து இந்திரனும்
பெட்ட செய்கைச் சிறுகுரங்கும்
உரிய செய்கை வினைப்பயத்தை
உண்ணும் எனவே உணர்ந்து அவனை

........”
- சீவக சிந்தாமணி (2815)

என் உரை:

தேவருலகின் தலைவனான இந்திரன், சுகபோகங்களில் திளைப்பதும், சிறுமைச்
செயல்கள் செய்து திரியும் சிறிய குரங்கு அனுபவிப்பதும் தத்தம் நல்வினை,
தீவினைப் பயன்களாலேயாம்.

அவர் மேலும் அப்பாட்டை இவ்வாறு முடிக்கிறார்.

அரியர் என்ன மகிழாது
எளியர் என்ன இகழாது
இருசார் வினையுந் தெளிந்தாரே
இறைவன் நூலும் தெளிந்தாரே


அதனால், ஆகா இவர் பெரியவர் என்று மகிழாமல், அய்ய.. இவர் சிறியவர்
என்று இகழாமல், அவர்களின் நிலைமைக்கு அவர்கள் வினைப்பயன்களே
என்று தெளிந்து, நல்வினை/தீவினை அகற்றி இறைவன் நிலையடையுங்கள்
என்று நமக்கு அறிவுறுத்துகிறார்.

இதேக் கருத்தை கணியன் பூங்குன்றனார் இவ்வாறு பாடுவதைப் பாருங்கள்.

“..திறவோர் காட்சியிற் தெளிந்தனம் ஆகலின்
மாட்சியிற் பெரியோரை வியத்தகும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
....”



இரா.பானுகுமார்

Friday, February 12, 2010

அண்ணாத்தல் செய்யாது அளறு


அண்ணாத்தல் செய்யாது அளறு!



நிறைய அன்பர்கள் கேட்டு விட்டார்கள். ’ஏன் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக
எழுதுவதில்லை’. நிறைய எழுதவேண்டும்தான். நேரம் கிடைக்கவில்லை என்று
நேரத்தின்மேல்ப் பழிப்போட விரும்பவில்லை. :-)

இதோ இப்போது எழுத ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இன்று, என்
இனிய நண்பர் சுரேஷிடம் பேசிக் கொண்டியிருக்கும் போது திருக்குறளில்
’அண்ணாத்த செய்யுமாம் அலரு’ அப்படி என்று வருமாமே, அதற்கு என்ன
பொருள் என்று கேட்டார். திடுதிப்புன்னு கேட்டா என்னாலச் சொல்ல முடியாது.
ஆனா ‘அண்ணாத்தல் செய்யாது அளரு’ என்று புலால் மறுத்தலில் வரும் குறள்
அது. கொஞ்சம் டைம் கொடுத்திங்கனா, பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று
அப்போதைக்கு நழுவினேன்.

ஆனாலும் புலால் மறுத்தல் அதிகாரத்தில் வரும் அந்தக் குறள் என் மனதில்
எதிரொலித்துக் கொண்டேயிருந்தது. வீட்டிற்கு வந்தவுடனே பரிமேலழகரைப்
புரட்டினேன்.

”உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்யா தளறு” - திருக்குறள் (255)

பரி என்னா சொல்றார்னா?..

”உயிர் நிலை ஊன் உண்ணமை உள்ளது -ஒரு சார் உயிர் உடம்பின் கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது; உண்ண அளரு அண்ணாத்தல் செய்யாது- ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின் அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்தற்கு அங்காவாது”.

அவரே தன் சிறப்புரையில் (விரிவுரை)..

”உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக ஏனைய பலவாய் வருதலின் ’உண்ணாமை உள்ளது உயிர்நிலை’ என்றார். ‘உண்ணின்’ என்பது ‘உண்ண’ எனத் திரிந்து நின்றது. ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் எனபதாம். கொலைப் பாவம் கொன்றார் மேல் நிற்றலின் பின் ஊன் உண்பார்க்குப் பாவம் இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது”.

அவரின், விரிவுரையில் ”உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக ஏனைய பலவாய் வருதலின் ’உண்ணாமை உள்ளது உயிர்நிலை” என்ற வாக்கியத்தை படித்தவுடன் திருக்குறளின் அத்தாரிட்டி என்று போற்றப்படும் ஒரு உரையாசிரியர் எப்படி இவ்வாறு எழுதினார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

என்ன சொல்லவரார்னா? விலங்குகளைக் கொன்று தின்றால் அவற்றின் எண்ணிக்கைகள் குறைந்துக் கொண்டே வருமாம். அதனால், ஊன் உண்ணாமல் இருப்பதே உயிர்நிலை என்று சொல்கிறார். ஊன் உண்ணாமலிருந்தால் அவைகள் பலவாக பெருகுமாம். இது எப்படியிருக்கு பார்த்திங்களா? லாஜிக் உதைக்கிறதே!

குறளின் உரை சரியில்லையே! பின் எப்படி உரை வரும்.

என் பார்வையில்

உயிரின் இயல்புகளில் ஊன் உண்ணாமையும் ஒன்று. Instinct Characteristics என்பார்களே அதுமாதிரி. ஊன் உண்ணாமை. அஃதாவது, உயிரின் பலப் பண்புகளில் ஊன் உண்ணாமை என்ற இயல்பும் ஒன்று. இது உயிரைப் பற்றியச் சமணப் புரிதல்.

’உண்ணாமை யுள்ள துயிர்நிலை’ - ஊன் உண்ணாமையே உயிரின் பண்பு அல்லது நிலை. உயிரின் பண்புக்கு மாறாக ஊன் உண்டால் மிகவும் அஞ்சத்தக்கக் கதியாகிய நரகக் கதிக்கு சென்று அழுந்திவிடுவீர்கள். அப்படி அழுந்தப் பட்ட உயிர் நரகத்தில் இருந்து வெளியே வரமுடியாது. நரகம் வழிவிடாது என்பதுதான் அக்குறளின் கருத்து.

இது இவ்வாறாருயிருக்க, ஊன் உண்டால் உயிர்கள் குறைந்துவிடும் என்று சொல்வது இங்கு பொருந்தாது. எவ்வாறெனின், உயிருக்கு அழிவில்லை. உடல்தான் அழிகிறது. மனிதக் குலம் இப்பூமியின் கண் தோன்றுவதற்கு முன்னமே, டைனாசோர் போன்ற விலங்குகள் இப்பூமியின் கண் இருந்து மறைந்ததாக நாம் அறிவோம். மனிதர்கள் உண்டா அழிந்துப் போயின? அல்லவே! இயற்கையாய் அவைகள் அழிந்துப்பட்டன.

இதனால், பரிமேலழகர் உரை இக்குறளுக்கு முற்றும் முரண்.


இரா.பானுகுமார்,
சென்னை.